×

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு 38 தீவிரவாதிகளுக்கும் மரண தண்டனை உறுதி: குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி 70 நிமிட இடைவெளியில் பல இடங்களில் 21 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 56 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கொண்டு வந்த மருத்துவமனைகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் 78 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில், சிமி அமைப்பின் தலைவர் சப்தார் நாகோரி உள்ளிட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் கடந்த 2022 ல் விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஒய்.கோக்ஜே மற்றும் சமீர் டேவ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு மனுவை ரத்து செய்து, 38 தீவிரவாதிகளின் மரண தண்டனை மற்றும் 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கில்தான்.

Tags : Ahmedabad ,Gujarat High Court ,Indian Mujahideen ,
× RELATED கேரளத்தில் தொடர் மழை வயநாட்டில்...