×

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: என்ஐஏ அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 25 சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளை ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவின் மிக முக்கியமான தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஹபீஸ் சயீத் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட ஹபீஸ் சயீத் மீது தனிப்பட்ட முறையிலும், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா மற்றும் அதன் துணை அமைப்பான தி ரெசிடன்ஸ் ப்ரண்ட் ஆகியவற்றின் தலைவராகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக போரிட்டது, எல்லைக்கு அப்பால் இருந்து சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானின் சதித்திட்டம், ஹபீல் சயீத்தின் பங்கு, விசாரணை நிலவரம், கள ஆய்வுகள் மூலம் என்ஐஏ சேகரித்த ஆதாரங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. முந்தைய குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தானை சேர்ந்த சஜித் ஜாட், ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

Tags : Hafiz Saeed ,Pahalgam ,NIA ,New Delhi ,Kashmir ,Operation Mahadev'… ,
× RELATED வயநாடு நிலச்சரிவு குறித்த செய்தியால்...