மலைப்பாதையில் 3,550 படிகள் ஏறிய வீடியோ வைரல் எதிரொலி: 116 வயதான சென்னை மூதாட்டிக்கு திருப்பதியில் விஐபி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 116 வயது மூதாட்டி ஒருவர், தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் 15ம் தேதி திருப்பதி வந்தார். திருமலைக்கு பஸ்சில் செல்லாமல் அனைவரும் மூதாட்டியின் விருப்பத்தின்பேரில் அலிபிரி மலைப்பாதையில் இருந்து 9 கிமீ தூரம் உள்ள 3,550 படிகளில் நடந்து சென்றனர். இதையடுத்து அந்த மூதாட்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏழுமலையானின் சிறப்பு தரிசனம் வழங்க முடிவு செய்தனர்.

அந்த மூதாட்டி கர்நாடகாவை சேர்ந்தவர் என வீடியோ வைரலான நிலையில், இதுபற்றி அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்டோர் நடத்திய விசாரணையில், மூதாட்டி சென்னையை சேர்ந்த நவநீதம்மா என்பதும், திருப்பதி ஜீவகோணாவில் உள்ள தனது மகள்வழி பேரனான ஆட்டோ டிரைவர் திக்பதி வீட்டில் தற்போது தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று காலை மூதாட்டி நவநீதம்மா மற்றும் அவரது குடும்பத்தினரை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, அலுவலக ஊழியர்கள் அழைத்து வந்து, விஐபி தரிசன வரிசையில் ஏழுமலையானை தரிசனம் செய்து வைத்தனர். அப்போது மூதாட்டி மனமுருகி ஏழுமலையானை வணங்கி வழிபட்டார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் மூதாட்டிக்கு ஆசீர்வாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து தீர்த்த பிரசாதத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா வழங்கினார்.

Related Stories: