புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கேள்வி நேரத்தில் அமைச்சர்களால் எழுத்துப்பூர்வமான பதில்களின் விவரங்கள் வழங்கப்படும் வரை கேள்விகள் மிகவும் ரகசியமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாநிலங்களவையில் மதியம் 12மணி முதல் 1 மணி வரையிலும் கேள்வி நேரம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே சில எம்பிக்கள் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. சில பதில்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளன.
இது குறித்து மக்களவை செயலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘எழுத்துப்பூர்வமாக பதில்களுக்கான பட்டியலில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் அவை அவையின் மேஜையில் வைக்கப்பட்டு கேள்வி நேரம் முடியும் வரை ரகசியமானவையாகவே கருதப்பட வேண்டும். வாய்மொழிப் பதிலுக்காக அந்த கேள்வி எடுத்துக்கொள்ளப்படாத பட்சத்தில் கேள்வி நேரம் முடியும் வரை அந்த கேள்விக்கான பதிலை வெளியிடக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தேதிக்கான அவையின் நடவடிக்கைகளில் இடம்பெறும் வடிவிலேயே ஒரு கேள்விக்கான பதில் இறுதியானதாக கருதப்படுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
