சென்னை: நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் பார்வையிட வந்த நிலையில், 2வது நிலையத்தின் நுழைவாயில் இருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு இடித்து அகற்றப்பட்டது. இதை கண்டித்து ஏராளமான திமுகவினர் குவிந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியை போக்கும் வகையில், கடந்த 2003-04ம் ஆண்டு கடல்நீரை குடிநீராக்கும் தொலைநோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, மாமல்லபுரம் அருகே நெம்மேலி ஆகிய 2 இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு தங்குதடையின் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட சூளேரிக்காடு பகுதியில், கடந்த 2010ம் ஆண்டு, பிப்ரவரி 23ம் தேதி முதலாவது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இப்பணிகள் முடிந்து, கடந்த 2013ம் ஆண்டு இந்த நிலையம் தடையின்றி இயங்கி, நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி உள்பட பல்வேறு பகுதி மக்களுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, முதலாவது கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அருகே ஜெர்மன் நாட்டின் நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2வது கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு,
தற்போது நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை உள்பட பல்வேறு பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த 2வது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் ஆலையை கடந்த 2024ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 9 லட்சம் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இந்த நுழைவாயிலில், கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, பேரூர் பகுதியில் சுமார் 85.51 ஏக்கர் பரப்பளவில், ரூ.5814.57 கோடி மதிப்பில் 3வது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் ஆலை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த கட்டுமான பணிகள் மற்றும் 2வது நிலைய செயல்பாடுகளை முதல்வர் விஜய் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், நெம்மேலியில் இயங்கி வரும் 2வது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் ஆலையின் நுழைவு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு, சாரம் கட்டி இடித்து அகற்றப்பட்டது. அதன்மீது பச்சைநிற துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் அறிந்து நேற்று அதிகாலை முன்னாள் எம்எல்ஏவும், திருப்போரூர் ஒன்றிய திமுக சேர்மனுமான எல்.இதயவர்மன் மற்றும் ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து, கல்வெட்டின் மீது இருந்த பச்சைநிற துணியை கிழித்து அகற்றினர். கல்வெட்டு முழுமையாக இடித்து அகற்றப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது, ‘நுழைவாயில் பகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் பெயர் அடங்கிய கல்வெட்டை உடனடியாக பொருத்த வேண்டும். இல்லையெனில், இப்பிரச்னை தொடர்பாக பலகட்ட போராட்டம் நடத்தப்படும்’ என்று திமுகவினர் கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* எந்த திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத ஸ்டிக்கர் விஜய் அரசே… வெட்கமே இல்லையா? திமுக கடும் கண்டனம்
திமுக தலைமையின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சென்னையின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக 2006ம் ஆண்டில் திமுக அரசு நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சி துறை முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.
2021ம் ஆண்டு அவரே முதல்வரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 2024 பிப்ரவரி 24ம்தேதி நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2வது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதனை பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, 2ம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* ஜெயலலிதா கல்வெட்டை அகற்றாதது ஏன்? அதிகாரிகளுக்கு திமுகவினர் கேள்வி
கல்வெட்டு அகற்றம் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் கல்வெட்டை அகற்றி விட்டு வேறு ஒரு இடத்தில் அமைக்க உள்ளோம்’ என்றனர். ஆனால் கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கும் சாலைக்கும் கிட்டத்தட்ட 20 அடி தூரம் இருக்கும்.
அப்படி இருக்கையில் ஏன் அகற்ற வேண்டும். அதிகாரிகள் கூறுவது போன்று போக்குவரத்து இடையூறாக மு.க.ஸ்டாலின் கல்வெட்டு அகற்றப்பட்டது என்றால், இதன் அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கல்வெட்டை ஏன் அகற்றவில்லை. அந்த கல்வெட்டால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லையா? இதெல்லாம் விஜய் அரசுக்கு ஆதரவாகத்தான் அதிகாரிகள் செயல்படுவதைத்தான் காட்டுகிறது. அவர்களது சப்பைக்கட்டுக்கு காலம் பதில் சொல்லும்’ என்று திமுகவினர் ஆவேசமாக கூறினர்.
