×

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: புயல் சின்னம் இன்று கரையை கடக்கிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: புயல் சின்னம் இன்று கரையை கடப்பதால் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேநேரம் வட மாவட்டங்களில் வெயில் தாக்கம் இன்னும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதாவது, சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. நேற்று முன்தினம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா-மேற்குவங்க கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, இன்று வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு அருகில் உள்ள திகாவிர்க்கு இடையே கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Chennai ,Meteorological Survey Centre ,Meteorological Centre ,Tamil Nadu ,
× RELATED பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா...