×

பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நிற்கும் தொலைதூர பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அவதி

 

உத்தமபாளையம், ஜூலை 6: உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்லாமல் வெளியே நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். உத்தமபாளையம் காந்திஜீ பஸ் நிலையத்திற்கு, தினமும் போடி, தேவாரம், ராயப்பன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த பேருந்துகள் நுழைவு வாயில், மற்றும் வெளியேறும் பகுதியிலுள்ள, மாநில நெடுஞ்சாலைகளில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்கின்றன. அவ்வாறு நிறுத்தப்படும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையோரங்களில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கேரளம் மற்றும் தமிழகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக உத்தமபாளையம் இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற வாகனங்கள் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுகிறது. எனவே தொலைதூர அரசு, மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Uttampalayam ,Uttampalayam Gandhiji ,Bodi ,Thevaram ,Rayappanpatti ,Kambam ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...