திருவனந்தபுரம்: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்பட வட மாவட்டங்களில் இடைவிடாது பலத்த மழை பெய்கிறது.
இந்த நிலையில் நாளை வரை மழை தொடரும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கண்ணூர், காசர்கோடு, இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இப்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
