சமோலி: அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் நாட்டையே அதிர வைத்துள்ள நிலையில், உத்தராகண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலிலும் நன்கொடை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயிலில் நன்கொடை திருட்டு நடைபெறுவதாகவும்,கோயில் நன்கொடையை திருடும் ஊழியர் கேதார்நாத், பத்ரிநாத் கோயில் நிர்வாக குழு தலைவர் ஹேமந்த்தின் தனி செயலாளர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படும் நபர் கோயிலில் ஊழியராக பணிபுரிபவர் என்றும், குறிப்பிட்ட நபர் தனது தனி செயலாளர் இல்லை என்றும் கோயில் நிர்வாக குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் நன்கொடை திருட்டு பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹேமந்த் திவேதி எச்சரித்து உள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் நன்கொடை பதிவுகளை ஆய்வு செய்து, வெளிப்படையான விசாரணை நடத்த அறக்கட்டளை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறிழைப்பவர்கள் மீது ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி சட்டம் 1939-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் சிங் ரங்கத் தெரிவித்துள்ளார். பைரவ் சேனா அமைப்பின் தலைவராக இருக்கும் சஞ்சீவ் காத்ரி என்பவர், இந்த முறைகேடு குறித்து சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேத்ரிநாத் கோவில் குளிர் காலத்தில் மூடப்படும், கோடைக்காலத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த கோவில் நவம்பர் மாதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
