கரூர்: கரூர் மணவாசியை சேர்ந்தவர் ஜீவா (50). நடன கலைஞரான இவர், கோயில் மற்றும் திருமண விழாக்களில் நடன குழுவுடன் இணைந்து நடனமாடுவார். இந்நிலையில் கரூர் தொழிற்பேட்டையில் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜீவாவும் நடன குழுவுடன் நடனமாடினார்.
மேடையில் ஒரு சினிமா பாடலுக்கு குழுவினருடன் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்த ஜீவா திடீரென மயங்கி பின் பக்கமாக விழுந்தார். இதனால் சக கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. ஜீவாவை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜீவா இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்த ஜீவாவுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. ஜீவா மேடையில் மயங்கி விழுந்து இறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
