×

சி.வி.சண்முகத்துடன் தவெக நிர்வாகி சந்திப்பு: அதிமுகவில் இருக்கிறேனா என்று எடப்பாடியிடம் கேளுங்கள் என பேட்டி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அந்த கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்து மீண்டும் மயிலம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரவலாக கூறப்பட்டது. தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து அளித்தார். அதிமுகவிலேயே இருந்து விடலாமா அல்லது தவெகவுக்கு தாவலாமா? என்ற குழப்பத்தில் அவர் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில், தற்போது திண்டிவனம் நகரப்பகுதி முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஆன்மிகத்தை தேடினால் நாங்கள் ஆன்மிகம்…, நீங்கள் அரசியலை தேடினால் நாங்களும் அரசியல்…, தலைவா…! நீங்கள் எதை செய்தாலும் அதில் உங்கள் பின்னே நாங்கள் அணிவகுப்போம்… என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சி.வி.சண்முகம் தனது நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அவரது ஆதரவாளர்கள் அரசின் ஒப்பந்த பணிகளுக்காக தவெகவிற்கு தாவ முடிவு செய்துவிட்டனர்.

இதற்கிடையில் நேற்று சி.வி.சண்முகம் வீட்டுக்கு வந்து தவெக நிர்வாகி ஒருவர் சந்தித்து பேசினார். அவர் திருமண அழைப்பிதழ் வைக்க வந்ததாக கூறினாலும் இது அரசியல் சந்திப்பு என்றே கூறப்படுகிறது. பின்னர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வாரமாக நிர்வாகிகளை சந்திக்காததால் சந்தித்தேன். ஒரு வாரம் வரை காத்திருக்க நிர்வாகிகளிடம் கூறியுள்ளேன். அதிமுகவில் நான் இருக்கிறேனா? என்பது எனக்கே தெரியல… எடப்பாடியிடம் கேட்டு எனக்கு சொல்லுங்கள் என கூறிவிட்டு விர்ரென புறப்பட்டு சென்றார்.

Tags : Shanmug ,Edapadi ,Atamugh ,Dindivanam ,Adimuga ,Mayilam Assembly ,V. SANMUGAM ,EDAPPADI PALANISAMI ,ADAMUKA GENERAL SECRETARY ,
× RELATED மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு...