டெல்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் வாகனங்களின் மைலேஜ் சிறிய அளவில் குறையலாம் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்து உள்ளார். தேவையான அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவது 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார்.
சமூக ஊடகங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இக்கலப்பு எரிபொருள் பயன்பாடு தொடர்பான கவலைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எத்தனால் கலப்பு குறித்து பரவும் வதந்திகளை மறுத்ததுடன், இந்தத் திட்டத்தின் நன்மைகளையும் விளக்கினார். எத்தனால் கலப்பால் மைலேஜ் சற்று குறையும் என்றாலும், அது வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்தும், பிக்கப்பை அதிகரிக்கும் மற்றும் என்ஜின் சத்தத்தை குறைக்கும் என்றார். E20 பெட்ரோல் பயன்பாட்டினால் காப்பீட்டு இழப்பீட்டுக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகப் பரவும் வதந்திகள் குறித்துப் பேசிய ஒன்றிய அமைச்சர், காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே அத்தகைய கருத்துகளை மறுத்துள்ளதை மீண்டும் நினைவுபடுத்தினார்.
