×

அழகு நிலையம் உரிமம் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர்கள் கைது

 

ஆவடி, ஜூலை 2: திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அழகு நிலையம் நடத்துவதற்கான உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் அழகு நிலையம் நடத்துவதற்கு தேவையான உரிமம் கோரி பெண் ஒருவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அமுல் என்பவர், பெண்ணிடம் உரிமம் பெற்றுத் தருவதற்காக 20,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பெண், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார், பெண்ணிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினர். அதன்படி காவல் நிலையத்திற்கு சென்ற பெண், உதவி ஆய்வாளர் அமுலிடம் லஞ்ச பணத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து உதவி ஆய்வாளர் அமுலை கையும் களவுமாகப் பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் அமுல் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு பெண் உதவி ஆய்வாளர்பாக்கியலட்சுமி ஆகியோரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திலேயே பெண் அதிகாரி லஞ்சம் வாங்கியபோது சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Avadi ,Thirumullaivayal ,Avadi Police ,
× RELATED 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜிஎஸ்டி தினம் கொண்டாட்டம்