×

9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜிஎஸ்டி தினம் கொண்டாட்டம்

 

சென்னை, ஜூலை 2: ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சரக்கு மற்றும் சேவை வரி தினம் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஜூலை 1, 2017ம் ஆண்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்ததது. இதன் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் முதன்மை தலைமை ஆணையர் மதன் மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர் மற்றும் சென்னை சுங்க மண்டலத்தின் தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பாகப் பணியாற்றிய வரி அதிகாரிகள், முன்னணி வரி செலுத்துநர்கள் மற்றும் தேசிய, சர்வதேச அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்க காலம் தொட்டு 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி வரையிலான வரி விதிப்பின் வரலாற்றைச் சுட்டிக்காட்டி விமலநாதன் பேசியதாவது: ஒரு நாட்டிற்கு சிறந்த வரி அமைப்பு என்பது இறைவனுக்கும் அரசனுக்கும் இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி.எஸ்.டி அமலாக்கமானது, நாட்டில் சரக்குகளின் தடையற்ற நடமாட்டத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் எளிதாக்கியுள்ளது.

இதன் வெற்றிகரமான செயல்பாட்டிற்குப் பின்னால் கூட்டாட்சித் தத்துவம், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான சுமுகமான ஒருங்கிணைப்பு மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் தீவிரமான பங்களிப்பு ஆகியவை மிக முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. மேலும், அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘ஜி.எஸ்.டி 2.0’ சீர்திருத்தங்கள், நம் நாட்டின் வரி விதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்துவதற்கான சரியான திசையிலான ஒரு எட்டாகும். இது மிகவும் வலுவான பாரதத்தை உருவாக்குவதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : GST Day ,Chennai ,Goods and Services Tax Day ,GST ,India ,
× RELATED எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62...