சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் பி.சி. ராய் அவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாளான ஜூலை 1 அன்று தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் தேசிய மருத்துவர் தினத்தில் போற்றுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது. நீட் போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
