பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் பிஇ படிப்புகளுக்கு 2 லட்சம் இடங்கள் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடந்தது. இந்த நிலையில் இன்று பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2,45,235 லட்சம் மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளதாக கூறினார்.

tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம். இதனிடையே 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த 53 பேரில் 39 பேர் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். ஜூலை 13 ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. வரும் ஜூலை 20 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 50,494 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்து உள்ளதாக குறிப்பிட்டார். இதில் 46,604 பேருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதில் மாணவர்கள் 1,30,767 பேர், மாணவிகள் – 1,05,246 பேர் ஆவர். முதலிடம் தர்மபுரி – அக்‌ஷிதா, இரண்டாம் இடம் திருப்பூர் – ரோகித் பாலன், மூன்றாம் இடம் நாமக்கல் – வெங்கட கிருஷ்ணன், நான்காம் இடம் அரியலூர் – ரிக்ஷிதா, ஐந்தாம் இடம் கன்னியாகுமரி – ரத்தன் பிடித்து உள்ளனர் என்றும் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் தெரிவித்தார்.

இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், பிரச்சனை உள்ளிட்ட ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி, குறை ஏதும் இருந்தால் தீர்வு காணலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Related Stories: