திருமயம், ஜூன் 30: அரிமளம் வட்டாரத்தில் 6 ஆயிரத்து 58 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்திற்குட்பட்ட அரிமளம், ராயவரம், கடியாபட்டி, கீழாநிலை, ஏம்பல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையம் மற்றும் லெனாவிலக்கு சுங்கச்சாவடியில் நடத்தப்பட்டது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 58 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட சுகாதார அலுவலர் ஹேம்சந்த்காந்தி லெனா விலக்கு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், நரிக்குறவர் காலனி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். அதேசமயம் லெனா விலக்கு சுங்கச்சாவடியை கடக்கும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்தி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி அரிமளம், கீழாநிலை, ஏம்பல் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.
முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் பழனிவேல் ராஜா தலைமையில் மருத்துவ அலுவலர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
