ஊட்டி, ஜூலை 1: நீலகிரி மாவட்டம் ஊட்டி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டி கிளை 1 மற்றும் கிளை 2ல் இருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் உள்ள காந்தல் பகுதிக்கு மார்க்கெட் அருகே இருந்து 5க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகள் பழையமையான இந்த பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் காந்தல் பகுதியில் இருந்து மார்க்கெட் நோக்கி வந்த நகர பேருந்து ஒன்று லோயர் பஜார் சாலையின் நடுவே பழுதாகி நின்றது.
பேருந்து ஸ்டார்ட் ஆகாத நிலையில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்வதறியாத நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகளும், பொதுமக்களும் பேருந்தை தள்ளி சாலையோரம் அப்புறப்படுத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஊட்டி காந்தல் பகுதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இதனால் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. அடிக்கடி பழுதடைவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் உரிய பராமரிப்பு செய்து இயக்க வேண்டும்’’ என்றனர்.
