அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா

 

ஊட்டி, ஜூலை 8: ஊட்டி அருகேயுள்ள அழகர் மலை பகுதியில் குடியிருப்பு அருகே குட்டியுடன் வலம் வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளில் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள், சிறுத்தை மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. இவை உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வரும் போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும், வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவது மற்றும் கால்நடைகளை வேட்டையாடுவது போன்ற அட்டூழியங்களும் தொடர்கிறது. கரடிகள் வீடுகள், கடைகள், ரேஷன் கடைகள் மற்றும் கோயில் போன்றவற்றை உடைத்து அங்குள்ள உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளை நாள் தோறும் சூறையாடிச் செல்கின்றன.

இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கரடிகளின் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஊட்டி அருகே உள்ள அழகர்மலை பகுதியில் இரு குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. கரடிகள் ஊருக்குள் வலம் வருவது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குட்டியுடன் கரடி உலா வரும் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் அழகர் மலை குடியிருப்பு பகுதியில் வலம் வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதேசமயம் கரடி தொல்லை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியில் வர வேண்டாம். உணவுப் பொருட்களை வெளியில் வைக்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: