மாறுவேடத்தில் பெரம்பூரில் விஜய் ஆய்வு என சொன்ன தவெக செய்தி தொடர்பாளருக்கு பாடநூல் வடிவமைப்பு வல்லுநர் குழுவில் பொறுப்பு: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வியில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க கடந்த திமுக ஆட்சியில் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பள்ளி பாடத்திட்ட வடிவமைப்பு குழுவை மாற்றி, புதிய குழு அமைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் ஆராய்ச்சியாளர் வெங்கடேஷ்வரன், ஓவியர் மணியம் செல்வன் உள்ளிட்ட 14 பேரை உறுப்பினர்களாகவும் இரண்டு பேரை உறுப்பினர் செயலராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மொத்தமாக 17 பேர் உள்ளனர். இக் குழுவில் தவெக செய்தித் தொடர்பாளர் அனந்தஜித் மகியா என்பவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இவர் கொடுத்த பேட்டி ஒன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்தப் பேட்டியில், முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் ஆய்வு செய்ய போவதில்லை என யார் சொன்னது? அவர் சத்தம் இல்லாமல் பல இடங்களுக்குப் போகக்கூடியவர். மாறுவேடத்தில் வந்து தொகுதியில் ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறார் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அறிவுப்பூர்வமாகப் பேசுபவருக்குத்தான் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில் பொறுப்பு வழங்கியுள்ளார்கள் எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

* தவறான எண்ணமே காரணம்
மாநிலப் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் பாடநூல் வடிவமைப்பு முந்தைய குழுத் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் நீக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் சுல்தான் கூறுகையில், ‘‘ஆட்சி மாற்றம் காரணமாக நான் பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது. புதிதாக தயாரித்த சில பாடநூல்களின் பிரதியை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சென்று வழங்கினேன்.

அந்தப் புகைப்படம் டிவிட்டரில் வெளியானதை வைத்து, நான் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நெருக்கமானவன் என்ற தவறான எண்ணம் அவர்கள் மத்தியில் உருவாகிவிட்டது. எனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை. ஆனால், அவர்களது மனதில் வேறு ஏதோ ஒரு எண்ணம் இருந்ததால் என்னை நீக்கிவிட்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மயில்சாமி அண்ணாதுரைக்கு எனது வாழ்த்துகள். அதேநேரத்தில், நாங்கள் தொடங்கிய சிறந்த கல்விக் கொள்கைகளை அவர் தொடர வேண்டும்’’ என்றார்.

Related Stories: