சென்னை: பராசக்தி படத்தை இயக்கிய வகையில் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 8.39 கோடி ரூபாயை செலுத்த கோரி இயக்குனர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியானது.
படத்தை இயக்க சுதா கொங்கராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை செலுத்த கோரியும் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதயம் முரளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பராசக்தி படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்.
பராசக்தி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, மனுவிற்கு ஜூலை 8ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
