×

திருட்டு, கொள்ளை வழக்கில் விசாரணை மந்தம்: பல கோடி ரூபாய் நகைகள் மீட்பதில் சிக்கல்

 

கோவை, ஜூன் 29: கோவை நகர், புறநகரில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம், பொருட்கள் திரும்ப கிடைக்குமா என பொதுமக்கள் விரக்தியில் புலம்பி வருகின்றனர். கோவை நகர், புறநகரில் கடந்த சில ஆண்டாக வழிப்பறி, நகை திருட்டு, கொள்ளை வழக்கில் மீட்பு சதவீதம் குறைந்து வருகிறது. 60 முதல் 70 சதவீதம் வரை நகை, பணம், பொருட்கள் மீட்கப்படுவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டில் மாநகர், மாவட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை. வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல், மோசடியாக அபகரித்தல் போன்ற வகைகளில் நகை, பணம் அதிகளவு இழந்து பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இவற்றை மீட்க போலீசார் தீவிரம் காட்டவில்லை. நடப்பாண்டில் நகர், புறநகரில் 50 சதவீதம் அளவிற்கு கூட மீட்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல வழக்குகளில் சொத்து மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள், களவு போன பொருட்கள் எப்போது கிடைக்கும் என கேட்டு பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கிறார்கள். திருடிய நபர்களை ஒரிரு நாளில் பிடித்தால் தான் பணம், நகைகள் முழுமையாக கிடைக்கும். குறிப்பாக பணத்தை திருடியவர்கள் விரைவாக செலவு செய்து விடுவார்கள். எதாவது சொத்து வாங்கியிருந்தால் அதை விற்று தான் தொகையை திரும்ப பெற முடியும்.

வெளியூர், வெளி மாநில கொள்ளையர்கள் பணம், நகை திருடி சென்று எங்காவது தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வருவதாக தெரிகிறது. திருட்டு நடந்து பல மாதங்களுக்கு பின்னர் திருடர்கள் சிக்கினாலும் நகை, பணம் முழுமையாக மீட்க முடியாத நிலையிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கோவை நகர், புறநகரில் நகை, பணம் மீட்க தனிப்படை எதுவும் அமைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் குற்ற பிரிவு இருந்தது. இது புலனாய்வு பிரிவாக மாறிய பின்னர் மீட்பு குறைந்து போய் விட்டது. புலனாய்வு போலீசார் திருட்டு, கொள்ளை வழக்குகளை விட இதர வழக்குகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நகையை இழந்தவர்கள் எப்போது வழக்கில் குற்றவாளிகள் சிக்குவார்கள், பணம், நகைகளை எப்போது மீட்டு தருவீர்கள் என போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நடையாய் நடந்து கேட்டு வருகிறார்கள்.

சைபர் கிரைம் மோசடி கும்பல் மூலமாக டிரேடிங், பிசினஸ் என்ற பெயரில் பல கோடி ரூபாய் சுருட்டி வருகிறார்கள். டிஜிட்டல் அரஸ்ட் எனவும் மோசடி நடக்கிறது. இந்த கும்பலிடம் பறிபோன பல கோடி ரூபாய் இன்னும் மீட்கப்படவில்லை. செல்போன், லேப்டாப் என எலக்ட்ரானிக்ஸ் திருடர்களை பிடிப்பதிலும், ஸ்க்ராப் திருடர்களை பிடிப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டவில்லை. பல குற்றங்களில் வழக்கு போடாமல் விடுவதும் அதிகமாகி விட்டது. தொடர் திருட்டு, நகை பொருட்கள் இழப்பினால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

 

Tags : Coimbatore ,Coimbatore city ,
× RELATED சிறுமுகை அருகே முறைகேடாக வண்டல் மண்...