×

வழிகாட்டி மதிப்பை அதிகரிக்க திட்டம்

 

கோவை, ஜூலை 1: தமிழகத்தில் பத்திர பதிவுத்துறையில் கடந்த 2023ம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. தற்போது பத்திர பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு (கைல்ட் லைன் வேல்யூ) மாற்றம் செய்து அறிவிக்கப்படவுள்ளது. 3 ஆண்டிற்கு பிறகு தற்போது மாநில அளவில் வழிகாட்டி மதிப்பில் உயர்வு கொண்டு வர ஆயத்த பணிகள் நடக்கிறது. மாநில அளவில் 576 சார் பதிவாளர் அலுவலகம் மூலமாக வருவாய் கிராமங்களில் விவசாயம், தொழிற்சாலை, வணிகம், குடியிருப்பு, புறம்ேபாக்கு என பல்வேறு நில வகைகளுக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

வழிகாட்டி மதிப்பு 30 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற நகரில் முக்கிய பிரதான ரோடு, வணிக பகுதிகளில் சதுரடி நிலம் ஏற்கனவே பல மடங்கு அதிகமாகி விட்டது. வழிகாட்டி மதிப்பு உயர்ந்தால் சதுரடி நிலம் மேலும் அதிகமாகி விடும். குக்கிராமங்களில் கூட நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பில் பெரும் மாற்றம் செய்யப்படும் நிலையிருக்கிறது. இதை அமலாக்கினால் ரியல் எஸ்டேட் தொழிலில் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பத்திர பதிவு ஆவணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ரியல் எஸ்டேட் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டு புதிய வழிகாட்டி மதிப்பு விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. வழிகாட்டி மதிப்பு உயரும் போது நில மதிப்பு மேலும் அதிகமாகி விடும். சொத்துக்களை வாரிசுகளுக்கு பாக பிரிவினை செய்வதற்கான தொகையும் அதிகமாகி விடும் என கூறப்படுகிறது. வழி காட்டி மதிப்பு உயரும் போது நிலம், சொத்து பத்திர பதிவு பாதிக்கப்படும். ஏற்கனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பதிவு கட்டணம் உச்சத்தை எட்டியதால் பாதிப்பு இருக்கிறது என பதிவுத்துறை எழுத்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது.

இதை சரி செய்ய கூடுதல் வருவாய் பெற வழிகாட்டி மதிப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. வழி காட்டி மதிப்பு ஒரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு வரும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Coimbatore ,Tamil Nadu ,
× RELATED சிறுமுகை அருகே முறைகேடாக வண்டல் மண்...