தேவாரம், ஜூன் 29: கோம்பை மலையடிவார பகுதிகளில் காட்டு பன்றிகள், நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவார பகுதிகளில் கூட்டம் கூட்டமாக காட்டுபன்றிகள் வாழ்கின்றன. மலையடிவாரப் பகுதிகளில் போதிய மழை பெய்யாத நிலையில் தினமும் காட்டு விலங்குகள் குறிப்பாக காட்டுப்பன்றிகள் குடிநீர் மற்றும் உணவுகளைத் தேடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த் வருகின்றன.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பயிர்களைத் தேடி விளைநிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகளை குறிவைத்து, சிலர் வேட்டையாடியும் வருவதாக கூறப்படுகிறது. எனவே வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, காட்டு பன்றிகளை மீண்டும் அடர்ந்த காடுகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
