×

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாக்கடை கால்வாயில் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக கவுன்சிலர்: சொந்த கட்சி ஆட்சிக்கு எதிராக நூதன முயற்சி

 

ஆக்ரா: ஆக்ராவில் நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளை கண்டித்து பாஜக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பீம் நகர் மற்றும் லாங்டே கி சௌகி பகுதிகளில் பல ஆண்டுகளாக வடிகால், சாலை மற்றும் பாதாள சாக்கடை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது மற்றும் சாக்கடை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக இறந்துவிட்டதாகக் கருதி, அவர்களுக்கு 13ம் நாள் காரியம் செய்யும் ‘தேரவி’ சடங்கை நடத்தினர். இதற்காக மக்கள் பிரதிநிதிகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்நிலையில், இப்பிரச்னையில் பொதுமக்களுக்கு ஆதரவாக நாக்லா ஹர்முக் 12வது வார்டு பாஜக கவுன்சிலர் கிஷன் நாயக், சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி பிறந்தநாள் கேக் வெட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

முழங்கால் அளவு அழுக்கு நீரில் நின்று கொண்டு அவர் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ‘பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவதால், அவர்களின் கவனத்தை ஈர்க்கவே இத்தகைய நூதன போராட்டத்தை மேற்கொண்டேன்’ என்று கிஷன் நாயக் தெரிவித்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஆக்ரா மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Tags : BJP ,Sewage ,Canal ,Agra ,Beem Nagar ,Langde Ki Chowki ,Uttar Pradesh ,
× RELATED மத்திய பிரதேசத்தில் சம்பளம் கேட்ட...