டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) எதிர்க்கட்சித் தலைவராக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்திலிருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இன்று தனது பதவியேற்பு நடைமுறைகளை நிறைவு செய்தார். முன்னதாக கடந்த ஜூன் 25, 2026 அன்றுடன் அவரது முந்தைய பதவிக்காலம் முடிவடைந்தது.
இந்நிலையில் தொடர்ந்து அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனின் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார். பின் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக (Leader of the Opposition) அவர் மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக கர்நாடகாவில் இருந்து தேர்வாகி இருந்த மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் எச். டி. தேவகவுடா மற்றும் இரு பாஜக எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 25, 2026 அன்றுடன் முடிவடைந்தது. இந்த சூழலில் கார்கே உள்பட காங்கிரஸ் தரப்பில் 3 பேரும், பாஜக தரப்பில் ஒருவரும் என முக்கியக் கட்சிகள் சார்பில் மொத்தம் 4 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான இறுதி நாளான ஜூன் 11, 2026 அன்று வேறு யாரும் கூடுதலாக இல்லாததால், தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதனால் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 4 பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மல்லிகார்ஜூன கார்கேவுடன் சேர்ந்து காங்கிரஸின் பவன் கேரா, மன்சூர் அலி கான் மற்றும் பாஜகவின் எம். நாகராஜா ஆகியோரும் கர்நாடகாவிலிருந்து புதிய மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
