×

அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் தவெக நிர்வாகி கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

 

சோழவந்தான்: அரசு பஸ் டிரைவரை தவெக நிர்வாகியின் சொந்த ஊருக்கு பஸ் போக்குவரத்தை நிறுத்தியதால், பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரியார் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிராமத்திற்கு வரும் கடைசி பஸ், அந்த ஊரிலேயே நிறுத்தப்படும். மறுநாள் காலை கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்திலிருந்து பெரியார் நிலையத்திற்கு செல்லும்.

இதனால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் பயனடைந்து வந்தனர். கடந்த 31ம் தேதி கடைசி டிரிப் பஸ் கருப்பட்டி கிராமத்துக்கு வரும்போது, ஊருக்கு முன்பாக தவெக பிரமுகர் தனுஷ் என்ற தனுஷ்கோடி நடுரோட்டில் காரை நிறுத்தியிருந்தார். அரசு பஸ்க்கு வழிவிட கூறியபோது, ஏற்பட்ட தகராறில் தவெக பிரமுகர், டிரைவர் பிரசாத்தை கத்தியால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பஸ் ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்திற்கு பஸ் இயக்க மறுத்தனர். இதையடுத்து கிராம பெரியவர்கள் மற்றும் போலீசார், அரசு போக்குவரத்து துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் மீண்டும் பஸ் இயக்கப்பட்டது.

இருப்பினும் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்திற்கு இரவில் கடைசி டிரிப் பஸ் வருவதில்லை. சோழவந்தானோடு திரும்பிச் சென்றுவிடுகிறது என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை ஊருக்கு வந்த பஸ்சை சிறைபிடித்து, பஸ்நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்து, உரிய பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘பஸ் டிரைவரை வெட்டிய தவெக பிரமுகர் சிறையில் உள்ளார். கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்திற்கு அடிக்கடி பஸ் வருவதில்லை. மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து வரும் பஸ் சோழவந்தானுடன் திரும்பி விடுகிறது. ஒருவர் செய்த தவறுக்காக கிராமத்திற்கு பஸ் சேவையை ரத்து செய்வது நியாயமில்லை. பஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பும், ஊருக்கு உரிய பஸ் சேவையை வழங்க போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Daveka Adhikari village ,Chozhavandan ,Dekka ,Karupati Balakrishnapuram ,Chozhavandan, Madurai district ,Madurai ,
× RELATED காரமடை அருகே சிறுத்தை தாக்கியதில்...