×

பழைய பாலம் மூடப்பட்ட நிலையில் காவிரி புதிய பாலத்தில் திடீர் விரிசல்: திருச்சியில் பரபரப்பு

 

திருச்சி: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர்-திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 1963ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளை கடந்ததுடன் பாலம் வலுவிழந்ததால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டப்போது பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2009ம் ஆண்டு திறக்கப்பட்டது. பழைய காவிரி பாலத்தில் 2010ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 16 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இப்பாலத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.

பழைய பாலத்தில் உள்ள 14 தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்புகளுக்கும் இடையே உள்ள 120 பேரிங்குகள் மாற்றப்பட உள்ளன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த பாலம் நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரில் இருந்து புதிய காவிரிப்பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சர்க்கார்பாளையம் அணுகு சாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவிநகர் வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக புதிய பாலத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புதிய பாலம் கட்டப்பட்டு 18 வருடங்கள் ஆன நிலையில் பாலத்தின் கான்கிரீட்டில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. சஞ்சீவி நகர் பகுதியிலிருந்து செல்லும் பாலத்தின் முதல் தூணுக்கு மேல் முதல் மற்றும் இரண்டு கான்கிரீட்டை இணைக்கும் பகுதியில் 2வது கான்கிரீட் அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பாலத்தில் அதிக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Kaviri ,Trichy ,Kaviri River ,Sanjeevinagar-Thiruvanaikaval ,Tiruchi-Chennai National Highway ,Trichi-Chennai National Highway ,
× RELATED சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்