தென்காசி உள்பட பல்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் விடியவிடிய பயணிகள் காத்திருப்பு

*கொசுக்கடியில் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்திருந்த அவலம்

*மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகள்

நெல்லை : நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து தென்காசி உள்பட பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால் விடிய, விடிய பயணிகள் காத்திருந்தனர். கொசுக்கடியில் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழுத்திருந்த நிலையில் அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்யாமல் அலட்சியம் காட்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

முகரம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒவ்வொரு டிப்போவில் இருந்து 10 சிறப்பு பேருந்துகளாக அனுப்பி வைக்கப்பட்டது. பொதுவாக இது போன்று ேபருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக லோக்கல் பேருந்துகளை வைத்து இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். ஆனால் நேற்று முன்தினம் போக்குவரத்து அதிகாரிகள் எந்தவிதமான மாற்று ஏற்பாடும் செய்யவில்லை.

இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பேருந்துக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். அவர்கள் இயக்கப்பட்ட பேருந்துகளில் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்தனர். மாலையில் இருந்து இரவு வரை பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருந்து பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இரவு 11 மணிக்கு பிறகே பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

குறிப்பாக தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி உள்பட பல்வேறு வழித்தடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை அரசு பஸ்கள் சரிவர இயக்க போக்குவரத் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நள்ளிரவு 12 மணியிலிருந்தே ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்வதற்காகப் பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் காத்திருந்தனர்.

மேலும் பஸ்கள் உரிய நேரத்திற்கு வராததால் கொசுக்கடியிலும், குளிரிலும் குழந்தைகள், முதியவர்களுடன் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகினர். பொறுமையிழந்த பயணிகள் அங்கிருந்த போக்குவரத்து கழக நேரக் கண்காணிப்பாளர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவசர, அவசரமாக நேற்று அதிகாலை மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். விடிய, விடிய பேருந்து நிலையத்திலேயே கொசுக்கடியில் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து காத்திருந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘அரசு விழா, சிறப்பு பஸ் இயக்கப்படும் காலங்களில் மாற்று ஏற்பாடுகளை செய்தால் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல முடியும். ஆனால் அவ்வாறு நேற்று முன்தினம் எந்தவித ஏற்பாடுகளையும் போக்குவரத்து நிர்வாகம் செய்யவில்லை. மாலை முதலே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், அதிகாரிகள் உரிய ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியம் காட்டினர். இது போன்று மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

நெல்லை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ‘போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை எனக்கூறுவதில் உண்மையில்லை. காரணம் தென்காசி மார்க்கத்தில் மட்டும் நேற்று 11 பஸ்கள் கூடுதலாக இயக்கி இருக்கிறோம். வழக்கமாக 36 பஸ்கள் இயக்கப்படும். வாஞ்சி மணியாச்சி, திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் அதிகமாக இருந்ததால் 9 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் விடப்படும் நேரங்களில் கூடுதலாக இருக்கும் பஸ்கள் மட்டுமே அனுப்பப்படும். ஏற்கனவே ஏரியாவில் ஓடிக்கொண்டிருக்கும் பஸ்கள் சிறப்பு பஸ்களாக அனுப்பப்படாது’ என்றனர்.

Related Stories: