காரமடை அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி பலி: விவசாயிகள் அதிர்ச்சி

 

காரமடை: காரமடை அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி பலியான சம்பவம் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு வடக்கு தோட்டம் கரியன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (60). இவர் தனது தோட்டத்தில் வாழை,தென்னை மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். மேலும் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ராஜாமணியின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

தொடர்ந்து அங்கு பட்டியில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை இழுத்துச்சென்று கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளது. தொடர்ந்து, நேற்று காலை வழக்கம் போல ராஜாமணி பால் கறப்பதற்காக பட்டியில் சென்று பார்த்தபோது கன்றுக்குட்டி மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கன்றுக்குட்டியை தேடிய போது தோட்டத்திற்குள் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் மற்றும் காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும், சிறுத்தையில் கால் தடம், பலியான கன்றுக்குட்டியை பார்த்தனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 20 சதவீதம் இழப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதுவும் காலம் தாழ்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: