×

அஞ்செட்டி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைப்பு

தேன்கனிக்கோட்டை : அஞ்செட்டி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க, கொண்டை ஊசி வளைவுகளில், நெடுஞ்சாலை துறை சார்பில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமலை உள்ளிட்ட அனைத்து கோடை வாசஸ்தலங்களுக்கும் செல்லும் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில், விபத்தில் சிக்கும் வாகனங்களை பாதுகாக்க ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி மலைப்பாதை வழியாக பிலிகுண்டுலு, ஒகேனக்கல் சாலை செல்கிறது. அதே போல், குந்துக்கோட்டை மலைப்பகுதியில் துவங்கி அஞ்செட்டி, பிலிகுண்டுலு வரை சுமார் 60 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் குறுகலான வளைவுகள் கொண்ட சாலை அமைந்துள்ளது.

அதிகமாக வளைவுகள், மேடு, பள்ளங்கள் கொண்ட சாலையாக உள்ளது. வனப்பகுதியில் யானைகள், கரடி, மான், காட்டு எருது மற்றும் குரங்குகள் அதிகமாக வாழ்கின்றன. அடிக்கடி யானைகள் சாலையை கடந்து சாலையின் மறுபுரம் உள்ள வனப்பகுதிக்குள் செல்கின்றன.

குந்துக்கோட்டை அடத்துமேட்டரை மலை பகுதியில், மிக குறுகலான முதல் கொண்டை ஊசி வளைவு உள்ளது. அஞ்செட்டியில் இருந்து நாட்றாம்பாளையம் இடையே கத்திரிபள்ளம் என்ற இடத்தில் மிக குறுகலான 2வது கொண்டை ஊசி வளைவு உள்ளது. இச்சாலையில் தினமும் பெங்களூரு, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல், பென்னாகரம் வரை அரசு பேருந்துகள், கர்நாடக மாநிலம் கனகபுரவில் இருந்து தக்கட்டி, அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல்லுக்கு இரண்டு கர்நாடக பேரூந்துகள் வந்து செல்கின்றன.

தேன்கனிக்கோட்டை, தர்மபுரி டெப்போக்களில் இருந்து அரசு பேரூந்துகள் தினமும் இயக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் கர்நாடக மாநிலத்திருந்து பெங்களூரு, ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமாக கார், டூவீலர்களில் சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றன.

அஞ்செட்டி பகுதிக்கு சிமெண்டு, கம்பி, ரேஷன் பொருட்கள் ஏற்றிக்கொண்டு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன, குந்துக்கோட்டை அடுத்த மெட்டரை என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவிலும், கத்திபள்ளம் என்ற இடத்தில் அவ்வப்போது லாரிகள், பஸ்கள் விபத்துகளில் சிக்குகின்றன.

இதனால் உயிரிழப்புகள், லாரி உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் விபத்துகளை தடுக்க, நெடுஞ்சாலை துறை மூலம் எச்சரிக்கை பலகைகள், வெள்ளை கோடுகள், சாலை தடுப்புகள் மற்றும் ரிப்ளெக்டர்கள் அமைத்தும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க, கடந்த திமுக ஆட்சியில் தேன்கனிக்கோட்டை – பஞ்சப்பள்ளி சாலையில் அணை பகுதி மற்றும் அஞ்செட்டி முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் ரப்பர் ரோலர் அமைக்கும் பணிகள் துவங்கியது. பஞ்சப்பள்ளி அணை பகுதியில் முழுமையாக பணிகள் முடிந்த நிலையில், தற்போது அஞ்செட்டி கொண்டை ஊசி வளைவு பகுதியில் ரப்பர் ரோலர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags : Anchetty mountain road ,Thenkanikottai ,Highways Department ,Tamil Nadu ,Yercaud ,Kollimalai ,
× RELATED இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு...