சென்னை: போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி 15 காவல்துறையினருக்கு முதல்வரின் பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, ‘போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ 2023ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் 2026ம் ஆண்டிற்கான முதல்வர் பதக்கங்களை காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப 15 காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கடலூர் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (சென்னை) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன்,
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, (சென்னை) காவல் உதவி ஆணையர் மனோஜ்குமார், திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன், கோவை மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் காமராஜ், தேனி குரங்கணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருண், தேனி குமுளி காவல் நிலைய தலைமை காவலர் ராஜ்குமார், நாகப்பட்டினம் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய தலைமை காவலர் கார்த்திகேயன், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் குத்புதீன்,
திருப்பூர் நல்லூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், நெல்லை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் ஐயப்பன், சென்னை அசோக் நகர் காவல்நிலைய தலைமை காவலர் பிரேம்குமார், கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தேனி அலகு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு தலைமைக்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பதக்கம், வரும் சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்க உள்ளார்.
