*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
*நோயாளிகள் குமுறல்
தஞ்சாவூர் : தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தாமல் தேங்கி சிதறி கிடக்கிறது. எனவே அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துமனையில் மகப்பேறு சிகிச்சை, தாய் சேய் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, நாய்கடி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுவதால், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
அதே போல் ஏராளமான உள்நோயாகளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலேயே குழந்தை பிறப்பில் இறப்பு விகிதம் இல்லாத மருத்துவமனையாக இதுவரை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குழுந்தைகள் பிறந்து வருகிறது. பல்வேறு தரப்பு மக்கள் இந்த மருத்துவமனையை தான் கோயிலாக கருதி வந்து செல்கின்றனர்.
ஆனால் இங்கு வார்டுகள் மற்றும் பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகள் அனைத்தும் உடனுக்குடன் அகற்றாமல் மருத்துவமனை வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் காற்று அடிக்கும் போது குப்பைகள் சிதறி கீழே கிடக்கிறது.
இதனால் தூர்நாற்றமும் வீசி வருகிறது. நோய் தீர்க்கும் மற்றும் குணப்படுத்தும் இடமாக தான் மருத்துவமனைகள் இருக்கும். ஆனால் குப்பைகள் இங்கு கொட்டப்படுவதால் நோயை அங்கு வரும் மக்களுக்கு அதிகரிக்கும் விதமாக உள்ளது. எனவே அங்கு உள்ள குப்பைகள் அனைத்தும் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
