திருச்சி காவேரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடல்

திருச்சி: திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. திருச்சி காவிரி பழைய பாலத்தின் இரு புறமும் மூடப்பட்டது. சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியின் முக்கிய பாலமாக காவேரி பாலம் இருந்து வருகிறது. இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 16 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இப்பாலத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த பாலத்தில் வரும் 3 மாதத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பாலம் தற்போது மூடப்படுகிறது.

இந்த பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரில் இருந்து புதிய காவிரிப்பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சர்க்கார்பாளையம் அணுகு சாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவிநகர் வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக புதிய பாலத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்கள் பிரிந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய காவிரி பாலத்தை மூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தை மூடியது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: