சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தனி அணியாக செயல்பட்டு, மீண்டும் அதிமுகவில் இணைந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு மீண்டும் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக 2ஆக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டனர். வேலுமணி அணியில் 25 எம்எல்ஏக்கள் இருந்தனர்.
இதில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அவர்களில் 4 பேர் தவெகவில் இணைந்தனர். சி.விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளார். இதை தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி அணியில் உள்ள 25 எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். பின்னர் வேலுமணி அணியினர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து எடப்பாடி அணியில் இணைந்தனர். அவர்களுக்கு தற்போது கட்சியில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாமல், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு: அதிமுக அமைப்பு செயலாளர் வரகூர் அ.அருணாசலம், மருத்துவ அணி செயலாளர் பி.வேணுகோபால், துணை செயலாளர் எம்.மணிகண்டன், கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும்,
மகளிர் அணி இணை செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் வி.சரோஜா, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எம்.சுப்பையா பாண்டியன், ஆர்.பி.மருதராஜா, கு.ராஜமாணிக்கம், துணை செயலாளர் பி.நாராயணபெருமாள், சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர் சல்மான் ஜாவித், விவசாய பிரிவு துணை தலைவர் எம்.சந்திரகாசி, காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கே.பி.தமிழ்அழகன்,
திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொருளாளர் பி.சவுந்தர்ராஜன் ஆகியோர் இன்று (நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதிமுக துணை பொதுச்செயலாளர்களாக நத்தம் விசுவநாதன் (முன்னாள் அமைச்சர்), எஸ்.பி.வேலுமணி (முன்னாள் அமைச்சர்), தலைமை நிலை செயலாளர் வரகூர் அ.அருணாசலம் (முன்னாள் அமைச்சர்), அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ணரெட்டி மற்றும் திருத்தணி கோ.அரி (திருவள்ளூர் மேற்கு மாவட்டம்), சி.கிருஷ்ணமூர்த்தி தென்காசி வடக்கு மாவட்டம்), ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர் மாவட்டம்), பி.சவுந்தர்ராஜன் (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் (முன்னாள் அமைச்சர்), எம்.மணிகண்டன் (முன்னாள் அமைச்சர்), ஆ.அருண்மொழிதேவன் (கடலூர் தெற்கு மாவட்டம்), சி.மகேந்திரன் (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்), என்.எஸ்.என்.நடராஜ் (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்), எம்.ரெத்தினசாமி (தஞ்சாவூர் மாநகர் மாவட்டம்) ஆகியோரும், கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக எம்.சந்திரகாசி (பெரம்பலூர் மாவட்டம்), எம்.சுப்பையா பாண்டியன் (தென்காசி வடக்கு மாவட்டம்) ஆகியோரும்,
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பா.நாராயணபெருமாள், துணை செயலாளராக டி.ஆர்.சுரேஷ்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமார், இணை செயலாளர்களாக கே.பி.தமிழ் அழகன், சல்மான் ஜாவித் ஆகியோரும், மருத்துவ அணி செயலாளராக வெ.சரோஜா, துணை செயலாளராக ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தொண்டர்களுக்கு இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
