மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (45). ஆட்டோ டிரைவர். திருமணமாகவில்லை. கூடலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (46). பொதுப்பணித்துறை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சம்பத்குமார் வீட்டு வாசல் முன்பு தங்கத்துரை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த செம்பனார்கோயில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் சம்பத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவரது மனைவிக்கும், தங்கத்துரைக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் அவரது மனைவி கோபித்து கொண்டு சென்னைக்கு சென்றதும், இந்த சம்பவத்தால் கடந்த ஒரு மாதமாக சம்பத்குமார் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த சம்பத்குமார், தனது வீட்டு வாசல் முன்பு நடந்து சென்ற தங்கத்துரையை கழுத்தை நெரித்து தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பத்குமாரை நேற்று கைது செய்து செய்தனர்.
