* ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என கதை சொல்லி பாடம் எடுத்தார்
திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டம் அஞ்சுகம் அம்மையார் அரங்கத்தில் நேற்று நடந்த திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் பேசியதாவது: கொள்கை பற்று தற்போது மிக முக்கியம். ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். திடீர்னு அந்த பக்கம் கரையை பார்க்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பச்சை, பசுமையாக தெரியும். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று சொல்வார்கள்.
முதலில் ஒரு குதிரை போகும், அப்புறம் ஒரு ஆடு போகும், அப்புறம் ஒரு மாடு போகும், மந்தையே அந்த பக்கமாக போயிரும். அங்க போனா அங்க நிலைமை இதைவிட ரொம்ப மோசமா இருக்கும். இங்காவது கொஞ்ச நஞ்சம் பச்சை தெரியும், அங்கே ஒண்ணுமே இருக்காது. காஞ்சு போய் கிடக்கும். சரி வந்தாச்சு, வந்தவுடனே திரும்புனா அந்த படுகை ஏத்துக்குமா ஏத்துக்காதா என்ன பண்றது, கொஞ்ச நாள் இருந்துட்டுதான் போவோமே என்று நினைக்கும். தற்போது இப்படியான ஒரு சூழல் உள்ளது.
நான் யாரை பற்றியும் தனிப்பட்ட முறையில சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்கிறேன். தப்பாக யாரும் எடுத்துக்காதீங்க. கடந்த ஆண்டு ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த ஆண்டு தண்ணீர் இல்லை. இதனால் ஒருபோக சாகுபடியாவது நடைபெறுமா? அது நடக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்று தெரியவில்லை.
கர்நாடகாவில் 4 அணை கட்டியுள்ளனர். மேலும் ஒரு அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இதை தடுப்பதற்கும், தண்ணீர் இல்லாத சூழலில் விவசாயிகளை காப்பதற்கும் அரசு என்ன செய்யப்போகிறது. டெல்டா கடும் பஞ்சத்தை நோக்கி நகருமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) தவெகவுக்கு தாவியதை முத்தரசன் கதை சொல்லி கிண்டல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
