×

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவரான சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் ஐய்யப்பன் என்பவர் மட்டும் அப்ரூவர் ஆகியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ஒன்பது பேரையும் விடுவித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது மட்டுமில்லாமல், குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு தூக்கு மற்றும் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்பதை குறைத்து, குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையாக வழங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது.

மேலும் குற்றவாளிகள் சரணடைய இரண்டு வாரம் அவகாசமும் வழங்கி இருந்தது. இந்த நிலையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பிரதான குற்றவாளிகளான பேசிலின் மற்றும் வில்லியம் ஆகியோர் சரணடைவதற்கு கூடுதலாக நான்கு வாரம் அவகாசம் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே சரணடைய இரண்டு வார காலம் அவகாசத்தை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் வந்து கூடுதலாக நான்கு வாரம் வேண்டும் என்று கூறுகிறீர்கள். உங்களது கோரிக்கையை கண்டிப்பாக ஏற்க முடியாது. எனவே மனு தாக்கல் செய்துள்ள குற்றவாளிகள் இருவரும் ஜூலை ஒன்றாம் தேதிக்குள் சரணடைய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் தமிழக காவல்துறை அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,Dr. ,Subbaiah ,New Delhi ,Raja Annamalaipuram, Chennai ,Ponnuchamy ,Mary Pushpam ,Basil ,Boris ,Basilin ,
× RELATED பேரவையில் முதல்வர் சைகை கண்ணியத்தை...