500 யூனிட் இலவச மின்சாரம் எப்போ தருவீங்க.!! முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் கேள்வி

திருப்பூர்: தங்களுக்கு கூடுதலாக 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது தவெக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டிலிருந்து 1,500 யூனிட்டாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க 100 சதவீத மின்சார வரி விலக்கு (Electricity Tax Exemption) ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.விசைத்தறி கூடங்களை நவீனமயமாக்க 35 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும் என்றெல்லாம் தவெக சார்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் ஏற்கனவே எங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உள்ள நிலையில், கூடுதலாக 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. எனவே முதல்வர் விஜய் விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும், இதனால் எங்கள் தொழில் இன்னும் மேம்படும். இது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என விசைத்தறியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு, தவெகவின் இந்தத் தேர்தல் வாக்குறுதியை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

Related Stories: