ரங்கம்பேட்டை அருகே டயர் வெடித்தது லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் பரிதாப பலி

*8 பேர் காயம்

திருமலை : ரங்கம்பேட்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சாமர்லகோட்டாவை சேர்ந்தவர்கள் பாபு, ராஜூ, காகடா ராஜூ உள்பட 10க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பாபட்லா மாவட்டம், கொல்லூரில் நடந்த கோயில் திருவிழாவிற்கு லோடு ஆட்டோவில் சென்றனர். பின்னர் மீண்டும் காக்கிநாடாவுக்கு புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை கிழக்கு கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை அருகே வந்தபோது லோடு ஆட்டோவின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. இதில் பாபு, ராஜூ, காகடா ராஜூ ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெத்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன், படுகாயம் அடைந்த 8 பேரையும் மீட்டு பெத்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் 3 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனபர்த்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: