தர்மபுரி, ஜூன் 24: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 12ம் வகுப்பு முடித்த, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறந்த முறையில் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள மாணவர்கள், உயர்கல்வி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும், உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். மனம் தளராமல் உயர் கல்வியில் சேர்ந்து அனைவரும் வாழ்க்கை தரத்தில் மேம்பட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 2025-26ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில், உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையம் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 5ம்தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்கள் அனைவரும் இந்த ஆலோசனை மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இலங்கை அகதிகள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பிற நலிவுற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள் பெறுவது தொடர்பாகவும், கல்விக் கடன் பெறுவது தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் திறன் பயிற்சி போன்ற படிப்புகளில் சேருவதற்கான உரிய ஆலோசனைகளும் வழங்கப்படும். எனவே, உயர்கல்வி தொடர்பான தங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 97509 – 82394, 97888 – 58580 அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களது உயர்கல்வி பயணத்தைத் தொடரலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஊராட்சி உதவி இயக்குனர் (பயிற்சி) முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
