உளுந்தூர்பேட்டை, ஜூன் 24: உளுந்தூர்பேட்டை அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தில் சினேகா என்பவர் வெள்ளிப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யும் ஜூவல்லரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். தொடர்ந்து கடைக்குள் சென்று பார்தபோது லாக்கரின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, முகத்தை துணியால் மூடிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து டார்ச் லைட் உதவியுடன் லாக்கரை உடைத்து அதிலிருந்த சுமார் 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றதும் பதிவாகியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
