திருவாடானை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து ராமநாதபுரம் மகளிா கோர்ட் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரு கிராமத்தில் நடைபெற்ற அவரது உறவினரின் திருமணத்திற்காக இந்த சிறுமி அவரது பெற்றோருடன் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த திருமணத்திற்கு வந்திருந்த கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (42) என்பவர் இந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி நடந்த விபரங்களை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அந்த சிறுமி இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.
இதில் தமிழ்ச்செல்வனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
