* விரைந்து நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை
பொன்னேரி: ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பழவேற்காடு பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. படகுகள் தரைதட்டி சேதமடைவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி என்ற பெருமையை கொண்டது. பழவேற்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த ஏரியிலும், ஏரியை ஒட்டிய கடலிலும் இறால் மற்றும் மீன் பிடித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரி கடலில் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்கு சென்றும் மீன் பிடித்தும் வருகின்றனர்.
பழவேற்காடு உவர்நீர் ஏரியானது, வங்க கடற்கரையை ஒட்டி 37.971 ஏக்கரில் ஆந்திர மாநிலம் வரை பரந்து காணப்படுகிறது. இதில் 32.122 ஏக்கர் நீர்த்தேக்கமாகவும் மற்றவை காடாகவும் உள்ளது. இந்த ஏரியில் 150க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள், மெல்லுடலிகள், மிதவை புழுக்கள் காணப்படுகின்றன. பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் போட்டு பதப்படுத்தாமல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும், அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்வது வழக்கம். இதை பயன்படுத்தி கடல்வாழ் உயிரினங்கள் நீரேற்றத்தின்போது ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்துவிட்டு கடலுக்குள் திரும்புவதுமாக தங்கள் வாழ்க்கை சுழற்சியை நிகழ்த்துகின்றன.
இயற்கையாக நடக்கும் இந்நிகழ்வினால் இந்த ஏரி வளமான மீன்பிடி தளமாக விளங்கி வருகிறது. கடல்நீரும், நன்னீரும் கலந்து உவர்ப்பாக உள்ள இந்த ஏரியில் ஆந்திர, தமிழக கிராமங்களை சேர்ந்த 1.30 லட்சம் மீனவர்கள் நேரடி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கடலும், ஏரியும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு, ஏரியின் ஆழம் வெகுவாக குறைந்து வருகிறது. லைட் ஹவுஸ் குப்பம், அரங்கம் குப்பம் உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது முகத்துவாரம் வழியாக செல்கின்றனர். முகத்துவாரத்தில் மணல் குவிந்து மூடப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீன் வரத்தும் குறைவாகவே உள்ளது.
இதற்கிடையே நிரந்தர முகத்துவாரம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதன் அடிப்படையில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்காக ரூபாய் 27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல முகத்துவாரம் அடைப்பட்டு காணப்படுகிறது. தற்போது வரை மீனவர்கள் தங்கள் செலவில் தூர்வாரி வருகின்றனர். முகத்துவாரம் இப்போது மணல் திட்டுகளால் மூடப்பட்டுள்ளதால் இரவில் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. ஒருசிலர் விடியற்காலையில் சென்று உயிரை பணயம் வைத்து மீன்பிடித்து வருகின்றனர்.
மணல் திட்டுகளில் படகுகள் தரைதட்டி அடிக்கடி மூழ்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதுவரை 10க்கும் மேற்பட்ட படகுகள் முகத்துவார மணல் திட்டுகளில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த முகத்துவார பகுதியில் காசிமேடு பகுதி விசைப்படகு ஒன்று சேதமடைந்து நீரில் மூழ்கியது. அதை வெளியே எடுக்க முடியாததால், அந்த படகின் மீது மற்ற படகுகள் அடிக்கடி மோதி சேதமாகின்றன. மேலும் அந்த படகில் உள்ள வலைகளில் மற்ற படகுகளின் எஞ்சின் மாட்டி சேதம் அடைவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இப்பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணியை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
