×

நான்கு வழிச்சாலை பாலப்பணி காரணமாக மருதூர் மேலக்கால் வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் செல்வதில் தடை

 

செய்துங்கநல்லூர், ஜூன் 23: வல்லநாடு அருகேயுள்ள வசவப்பபுரம் பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பாலப் பணி காரணமாக மருதூர் மேலக்கால் வாய்க்காலில் கார் சாகுபடி நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு கிடைக்காமல் விவசாயிகள் அல்லாடி வருகின்றனர். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 9 முக்கிய கால்வாய்களின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு நிலங்களுக்கு 15.6.2026 முதல் 13.10.2026 வரை 121 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லநாடு அருகே வசவப்பபுரம் பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பாலப் பணி காரணமாக கான்கிரீட் கற்கள், கான்கிரீட் கலவைகள் மற்றும் மண் குவியல்கள் வாய்க்காலுக்குள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கார் சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு, நீர்வளத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மூலம் மருதூர் மேலக்கால் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள கற்கள், கான்கிரீட் கழிவுகள் மற்றும் மண் குவியல்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Marathur Malakal Gorge ,Thirunganallur ,Vasavappuram ,Vallanadu ,Marathur Malakkal ,
× RELATED முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி...