செங்கல்பட்டு, ஜூன் 23: சென்னை மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஏற்கனவே இளம் வயதில் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சிறுமியின வீட்டருகில் வசித்து வரும் கர்ணா (எ) கர்ணாகரன் (24) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் கர்ணா சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறி சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். பின்னர், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுபோன்று பலமுறை சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததால் சிறுமி கர்ப்பமுற்று ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கர்ணாவிடம் கேட்டபோது அந்த குழந்தை தன்னுடையது அல்ல என்றும், சிறுமியை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றும் கூறி ஏமாற்றி உள்ளார். இதனால், சிறுமி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கர்ணாவை கைது செய்த போலீசார் அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், டி.என்.எ. பரிசோதனை செய்ததில் சிறுமியின் குழந்தைக்கு உயிரியல் தந்தை கர்ணா (எ) கர்ணாகரன்தான் என்பது உறுதியானது. இந்த வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் லட்சுமி ஆஜராகி இருதரப்பு வாதங்களை கேட்டு வாதாடினார். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையில் கர்ணா குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு அதனடிப்படையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீட்டு தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கிடவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
