லண்டன்: கட்சிக்குள் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2024ல் நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அதன் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (63) பிரதமராக பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவை பெற்றிருந்த ஸ்டார்மரின் ஆட்சி மீது இரண்டே ஆண்டில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதிலும் ஸ்டார்மர் தோல்வி அடைந்த நிலையில், எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய தனது நண்பர் பீட்டர் மாண்டல்சனை அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதராக நியமித்தது கட்சியிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால், வரும் 2029ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஸ்டார்மர் தலைமையில் சந்திக்க தொழிலாளர் கட்சி விரும்பவில்லை.
இந்நிலையில், கெய்ர் ஸ்டார்மர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசை நேரில் சந்தித்து தனது முடிவை தெரிவித்த ஸ்டார்மர், லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்டு ஆற்றிய உரையில், ‘‘எனது பதவிக்காலத்தில் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் நான் நேசிக்கும் நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவே அமைந்திருந்தது.
எனக்கு பிறகு புதிய கட்சி தலைவரும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படும் வரை நான் பதவியில் நீடிப்பேன். அதற்கான நடைமுறைகளை தொடங்க கட்சியின் தேசிய நிர்வாக குழுவை கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார். இதன்படி, ஜூலை 9ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஜூலை 17ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் கோடைக்கால விடுமுறைக்கு முன்பாகவே புதிய பிரதமர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் 6வது பிரதமர் ஸ்டார்மர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பிரதமர் யார்?
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்பியாக உள்ள கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (56) அடுத்த பிரதமராக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். கட்சியிலும் அவருக்கு மிகுந்த ஆதரவு இருப்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்மரின் ராஜினாமா மாற்றத்தை குறிப்பதாக கூறி உள்ள பர்ன்ஹாம், பொருளாதார வளர்ச்சி, விலைவாசி குறைப்பு, பொதுச் சேவைகள், அடுத்த தலைமுறைக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில் முன்னேற்றத்தை காண மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
