ராணிப்பேட்டை: விசிக தலைவர் தொல் திருமாவளவன் ராணிப்பேட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான மீன் இறைச்சி உணவு பதப்படுத்தும் இடத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு சிலர் உயிரிழந்திருப்பது மற்றும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்குவது மட்டுமின்றி உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் கல்வி தகுதி உடையவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்து ஏற்பட்ட பிறகு அவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம் வழங்குவதை விட, இதுபோன்ற பேரிடர் சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுப்பது சிறந்தது.
சாதி வாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருப்பதை விசிக வரவேற்கிறது. ஓபிசி மற்றும் முற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு சாதி வாரிய கணக்கெடுப்பு இல்லை. ஆகவே இதர பிற்படுத்தப்பட்டோர் முன்னேறிய சமூகங்களை சார்ந்தோர் ஆகிய பிரிவினரையும் சாதி வாரிய கணக்கெடுப்பின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் விசிகவின் கோரிக்கை.
பட்டியலின மக்களுக்கு சோஷியோ எகானமிக் சர்வே உடனடியாக எடுக்க வேண்டும். இதற்கு ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் தேவையில்லை. ஒட்டுமொத்த சாதி வாரிய கணக்கெடுப்பு என்பது பொதுவாக பார்க்கப்பட்டாலும் அது ஓபிசி, எஸ்சி சமூகத்தினருக்கான தேவையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
