கொச்சி: கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள வைப்பின் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கப்பல் கட்டும் தளத்தில், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுப் சரக்குக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கப்பலின் என்ஜின் மற்றும் டெக் பகுதியில் திடீரென தீப்பற்றியது.
இயந்திர அறையிலிருந்து புகையும் தீப்பிழம்புகளும் எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். எர்ணாகுளம் மாவட்டத்தின் பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் (Cochin Shipyard) சிறப்பு தீயணைப்புப் படகுகளின் உதவியும் நாடப்பட்டது.
கப்பலில் பெயிண்ட் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததாலும், என்ஜின் பகுதியில் கடுமையான புகை மூட்டம் நிலவியதாலும் வீரர்கள் உள்ளே நுழைந்து தீயை அணைப்பதில் பெரும் சவாலைச் சந்தித்தனர். கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், உரிய அனுமதியின்றி இந்த கப்பல் கட்டும் தளம் இயங்குவதாகவும், சுற்றுச்சூழல் விதிகள் மீறப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அந்த வளாகம் ஒரு பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளதால், இரைச்சல் மற்றும் காற்று மாசுபாடு குறித்தும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.
டெக்கின் சில பகுதிகளில் இருந்து இன்னும் லேசான புகை வந்துகொண்டிருந்தாலும், தீ மேலும் பரவாமல் முற்றிலும் அணைக்கப்பட்டு நிலைமை சீரடைந்துள்ளது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
