சத்தியமங்கலம் அருகே வண்டிபாளையம் ஊருக்குள் புகுந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

*வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறை திணறல்

சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்த மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன.

இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் விளைவித்துள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம், உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய மக்னா யானை சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து உக்கரம் வழியாக வண்டிபாளையம் கிராமத்திற்கு சென்றது. இரவு முழுவதும் விளாமுண்டி வனத்துறையினர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்த நிலையில், யானை வனத்துறையினர் கண்களில் சிக்காமல் போக்கு காட்டியது.

இதற்கிடையே நேற்று காலை வண்டிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் நடமாடிய யானை அங்கிருந்து அருகே உள்ள காவிலிபாளையம் குளத்திற்கு சென்றது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவிலிபாளையம் குளத்தில் உள்ள முட்புதர் காட்டில் யானை முகாமிட்டது. மேலும், குளத்து நீரில் இறங்கிய காட்டு யானை உற்சாக குளியல் போட்டது. இதைத்தொடர்ந்து விளாமுண்டி வனத்துறை ஊழியர்கள் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

மேலும், கூடுதலாக சத்தியமங்கலம் மற்றும் டி.என். பாளையம் வனச்சரகங்களில் இருந்து வனத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. யானை குளத்தில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யானை நடமாடும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சை புளியம்பட்டி போலீசாரும் யானையை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் யானையை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக குளத்தில் இருந்து யானையை விரட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்ட நிலையில் யானை மெதுவாக குளத்தில் இருந்து வெளியேறிய போது அப்பகுதியில் யானையை பார்ப்பதற்காக பொதுமக்கள் நடமாடியதால் மீண்டும் குளத்திற்கே திரும்பியது. இதனால், வனத்துறையினரின் முயற்சி தோல்வி அடைந்தது.

இரவு நேரத்தில் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டு யானை ஊருக்குள் நுழைந்து குளத்தில் முகாமிட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: